Economy, business and finance
கென்யாவில் இருந்து டாடா நிறுவனம் வெளியேற அந்நாட்டு அதிபர் உத்தரவு!

கென்யாவில் இருந்து டாடா நிறுவனம் வெளியேற அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவு. வேலைவாய்ப்புகள், உட்கட்டமைப்பு உருவாக்காததால் நடவடிக்கை.
கென்யாவில் இயங்கி வரும் இந்தியாவின் டாடா நிறுவனம் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திவிட்டு, நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
கென்ய தலைநகர் நைரோபியின் தென்மேற்கில் உள்ள காஜியாடோவில், மகோடி ஏரிப்பகுதியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் சலவை சோடா, இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கண்ணாடி, ரசாயனம், காகிதம், ஆடை உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான சலவை சோடாவை ஆண்டுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யும் டாடா, கென்யாவின் பொருளாதாரத்திற்கு பெரும்பங்காற்றி வருகிறது.
இந்நிலையில், காஜியாடோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ, டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளையோ, உட்கட்டமைப்புகளையோ உருவாக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், நாட்டின் இயற்கை வளங்களை வெறும் மூலப்பொருட்களாக மட்டுமே ஏற்றுமதி செய்ய கென்யா யாருக்கும் அடிமைகள் இல்லை என்று காட்டமாக பேசினார்.
எனவே, டாடா நிறுவனம் தனது செயல்பாட்டை முழுமையாக நிறுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். புதிய முதலீட்டாளர்களை கென்யாவிற்கு அழைத்து வந்து, இங்கேயே கண்ணாடியும் கெமிக்கல்களும் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.


