Politics
“தீவிரக் கண்காணிப்பில் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இருந்து வருகிறார்…” – மருத்துவமனை அறிக்கை

எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது, தீவிர கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை.
“எம்.எல்.ஏ., வி. எஸ். பாபுவுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பிலும் மருத்துவ மேற்பார்வையிலும் உள்ளார்” என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகம் பேசுபொருளானது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தோல்வி. கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக மூன்று முறை இருந்தவர் மு.க.ஸ்டாலின். அவர் தோல்வி எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வென்றது தி.மு.க.வில் அவருடன் பயணித்த வி.எஸ். பாபு. 2006 சட்டப்பேரவை தேர்தலிலேயே புரசைவாக்கம் தொகுதியில் வி.எஸ். பாபு தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.
அதன்பின் தமிழகம் வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதில் இணைந்த வி.எஸ். பாபு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அதன்படி ஸ்டாலினை விட கிட்டத்தட்ட 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து வெற்றிக்கு பிறகு வி.எஸ். பாபு காட்டிய சைகை இணையதளங்களில் அதிகம் கவனம் பெற்றது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ். பாபு நேற்று மூச்சுதிணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை நிர்வாகம், “வி. எஸ். பாபுவின் உடல் நிலை சீராக உள்ளது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பல்துறை நிபுணர்கள் குழுவின் பராமரிப்பில் உள்ளார். மருத்துவ ரீதியாகத் தேவைப்படும் சுவாச ஆதரவு அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் இருந்து வருகிறார்” என கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாலை எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மற்றொரு மருத்துவ அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “எம்.எல்.ஏ., வி. எஸ். பாபுவுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. கூடுதல் மருத்துவப் பராமரிப்புடன் அவர் தொடர்ந்து குணமடைந்து வருகிறார். அவர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பிலும் மருத்துவ மேற்பார்வையிலும் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
