Health
தினம் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல்: வீடுகளில் ஆய்வு செய்ய கமிஷனர் உத்தரவு
சென்னை: சென்னையில் தினம் 20க்கும் மேற்பட்டோர் 'டெங்கு' காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருவதால், வீடு, வீடாக சென்று சுகாதார அலுவலர்கள் கள ஆய்வு செய்ய, மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தினசரி 20க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தாண்டில் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து, மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் ஆய்வு கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
பின், மாநகராட்சி கமிஷனர் சமீரன் பேசியதாவது:
கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் காலை 7:00 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். கொசு இனப்பெருக்கத்தை கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில், வீடு, வீடாக சென்று வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் கொசுப்புழு பெருக்கம் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
வீடுகளின் உட்புறத்தில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டிகள், கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
கொசுப்புழு உருவாகக்கூடிய இடங்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுப்புழு பெருக்கம் கண்டறியப்பட்ட வீடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில், கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்துவதுடன், மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.