Arts, culture, entertainment and media
5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... பழங்கள், கோழிகள், தேன்! - ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்!

``இயற்கையோடு இயைந்து வாழறதுக் காகவும் விவசாயத்தில் முழுக்கவனம் செலுத்துறதுக்காகவும், இங்கேயே வீடு கட்டி வசிக்கிறோம்.
இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் பலரும் குறிப்பிட்ட சதவிகித நிலத்தை ஒதுக்கி மரம் வளர்ப்பிலும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். இதுபோன்ற காடுகள், மழை ஈர்ப்புக்கும் புவி வெப்பமாவதைத் தடுக்கவும் பெரிதும் உதவுவதோடு, பிற்காலத்தில் கணிசமான அளவில் வருமானத்தையும் கொடுக்கின்றன. அதனால்தான் வாய்ப்புள்ள விவசாயிகள் பலரும் மர வளர்ப்பில் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை செய்து வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'மரம்' பழனிச்சாமி.
முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரான பழனிச்சாமி அரியலூர் மாவட்டம், கருக்கை கிராமத்தில் ஐந்தரை ஏக்கர் பரப்பில், `நற்பவி வளர் சோலை' என்ற பெயரில் ஆயிரக் கணக்கான மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள் மற்றும் பழ மரங்களை வளர்த்து ஓர் உணவுக்காட்டை உருவாக்கியிருக்கிறார்.
பசுமையான சூழலில் பண்ணை!
அரியலூர் - கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில்... விருத்தாசலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, கருக்கை கிராமம். பரந்து விரிந்து பசுமையாகக் காட்சி அளிக்கிறது, நற்பவி வளர் சோலை. குளிர் காற்றும் பசுமையான சூழலும், பழ மரங்களிலிருந்து வீசிய மணமும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தின. ஊட்டி, கொடைக் கானல் போன்ற மலைப் பகுதிகளில் ஓர் அடர்ந்த காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகள்; பண்ணை முழுவதும் பரவலாக வியாபித்திருந்த இருள்; பார்க்கும் இடமெல்லாம் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் மெத்தை அமைத்தது போல் இலை தழைகள் மற்றும் சருகுகள் என அந்தப் பண்ணை ரம்மியமாகக் காட்சியளித்தது. பழனிச்சாமி, மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்றுப் பேசினார்.
``என் சொந்த ஊர், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பக்கத்தில் இருக்கிற ஆலிச்சிக் குடி. நாங்க விவசாயக் குடும்பம். சின்ன வயசிலிருந்தே எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். பள்ளிப் படிப்பை முடிச்சதும் விவசாயத்தில் இறங்கிட்டேன். பொது வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டதால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் வருஷம் வரை மூன்று முறை ஆலிச்சிக்குடி ஊராட்சி மன்றத் தலைவரா மக்கள் பணி செஞ்சேன்.
ஆர்வம் ஏற்படுத்திய ஜி.டி.நாயுடு!
சுமார் 50 வருஷத்துக்கு முன்னாடி, விஞ்ஞானி ஜி.டி நாயுடுவைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைச்சது. அவர் சிறப்பா விவசாயமும் செஞ்சுட்டிருந்தார். அவர் தோட்டத்தைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். அதே மாதிரி நாமளும் விவசாயம் செய்யணும்னு ஆசை ஏற்பட்டுச்சு. அது சாத்தியமாகிறதுக்கு ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. ஆரம்பத்தில் ஆலிச்சிக்குடியில் இருக்கிற மூணு ஏக்கர் நஞ்சை நிலத்தில் ரசாயன உரம் போட்டு வீரிய ரக நெல் சாகுபடி செஞ்சுட்டிருந்தேன். கருக்கையில் இருக்கிற இந்த ஐந்தரை ஏக்கர் புஞ்சை நிலத்தில் முந்திரிச் சாகுபடி செஞ்சுட்டிருந்தேன்.
வாழ்க்கையை மாற்றிய `பசுமை விகடன்'!
அந்தச் சமயத்தில்தான் 2007-ம் வருஷம், `பசுமை விகடன்' புத்தகம் வெளியாச்சு. என் விவசாய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுச்சு. `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்’’ என்ற பழனிச்சாமி சாகுபடி செய்யும் பயிர்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
பாரம்பர்ய ரகங்கள்... மரப்பயிர்கள்!
``அதுக்கப்புறம் ஆலிச்சிக்குடி நிலத்தில், நாட்டுப்பொன்னி, மாப்பிள்ளைச் சம்பானு பாரம்பர்ய நெல் ரகங்களை இயற்கை முறையில் பயிர் செய்ய ஆரம்பிச்சேன். வீட்டுச் சாப்பாட்டுத் தேவைக்கு இந்த அரிசி வகைகளைத்தான் பயன்படுத்துறோம். இந்த நிலத்தில் டிம்பர் மற்றும் பழ மரங்களை வளர்க்கலாம்னு முடிவு பண்ணி, முந்திரி மரங்களை அழிச்சிட்டு... வேங்கை, கருங்காலி, செங்காலி, செம் மரம், தேக்கு, ரோஸ்வுட், வேம்பு, மஞ்சள் கடம்பு, மகோகனி, கடம்பு, மகிழம், பூவரசு, இலுப்பைனு 40 வகை யில் 2 ஆயிரம் டிம்பர் மரங் களை நடவு செஞ்சேன். அதோடு, ருத்திராட்சம், மகா வில்வம், நாகலிங்கம், சர்வ சுகந்தி, முள் இல்லா மூங்கில் மரங்களும் நிறைய இருக்கு.
70 வகையான பழ மரங்கள்!
தோட்டத்தை உணவுக் காடா மாத்தணும்னு முடிவு பண்ணி… டிம்பர் மரங்களுக்கு இடையில் பாக்கு, காபி, மிளகு, மா, பலா, சப்போட்டா, அன்னாசி, பப்பாளி, செர்ரி, சீத்தா, கொடுக்காப்புளி, நெல்லி, களாக்காய், ஜாதிக்காய், எலுமிச்சை, மங்குஸ்தான், லிட்சி, அவோகேடோ, ஸ்டார் ஃப்ருட், வாட்டர் ஆப்பிள், ரம்புட்டான், பராபா, அபியூ, பிரிஞ்சி, வாசனைப்பட்டை உள்ளிட்ட 70 வகையான உணவுப் பயிர்களையும் சாகுபடி செய்யுறேன்.
இடுபொருள் செலவே இல்லை!
இங்க எல்லாப் பயிர்களுமே நல்லா செழிப்பா விளைஞ்சு அற்புதமா பலன் கொடுத்துக்கிட்டு இருக்கு. சுமார் 12 வருஷமா, இயற்கை இடுபொருள்களுக்குனு ஒரு பைசா கூட செலவு செய்யலை. மாட்டு எரு கூட போடலை. ஆனாலும் மண் நல்ல வளமாகி, நிறைய மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உருவாகிட்டே இருக்கு. இதுக்குக் காரணம், ஆரம்பக்காலத்தில் நான் அமைச்ச மூடாக்கு தான். இங்கே மரச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சதிலிருந்து சுமார் 8 வருஷம் வரைக்கும் ஆவாரை, கொழிஞ்சி, எருக்கன் இலைகளை நிலம் முழுக்க பரவலா போட்டு மூடாக்கு அமைச்சிட்டே இருந்தேன்.
மண் வளத்தைக் கூட்டும் இலைகள்!
இந்த ஊரில் புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்கள், நீர்நிலை கரைகளில் களைத் தாவரங்களா ஆவாரை, கொழிஞ்சி, எருக்கன்னு மூணு வகையான செடிகளும் நிறைய மண்டிக் கிடக்கும். அதை வெட்டிக் கொண்டு வந்து, இந்த நிலத்தில் மூடாக்கா போட்டுக்கிட்டே இருந்தேன். அதனால், மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு நுண்ணுயிரிகள் பெருகுச்சு. ஆவாரை, கொழிஞ்சி, எருக்கன் ஆகிய மூணு வகையான இலைகளுமே அருமையான பசுந்தாள் உரம். முதல் அஞ்சு வருஷம் வரைக்கும், ஒரு வருஷத்துக்கு ஒரு ஏக்கருக்கு 3-5 டன் மாட்டு எரு கொடுத்தேன். அதுக்கப்புறம் நிறுத்திட்டேன். மரப்பயிர்களிலிருந்து உதிர்கிற இலைகளும் மண்ணில் மட்கிப் போறதால மண் வளம் கூடுது.
கொட்டகை இல்லாமலே கோழி வளர்ப்பு!
இங்கே 200-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் வளர்க்கிறேன். கோழிகளுக்குக் கொட்டகையெல்லாம் கிடையாது. பகல் முழுக்க நிலத்தில் மேய்ஞ்சு புழு, பூச்சிகள், கறையான்கள் மற்றும் புல் பூண்டுகளைச் சாப்பிட்டு நல்லா திடகாத்திரமா வளருது. இரவு நேரங்களில் மரக்கிளைகளில் தங்கிடும். இங்க பரவலா 30 தேனீப் பெட்டிகள் அமைச்சிருக்கேன். இதனால் பயிர்களில் மகரந்தச் சேர்க்கை சிறப்பா நடந்து, விளைச்சல் அதிகரிக்குது. கிடைக்கிற தேனில் வீட்டுத் தேவைக்குப் போக மீதியுள்ளதை விற்பனை செய்றேன்’’ என்ற பழனிச்சாமி நிறைவாக,
வீட்டில் வைத்தே விற்பனை!
``இயற்கையோடு இயைந்து வாழறதுக் காகவும் விவசாயத்தில் முழுக்கவனம் செலுத்துறதுக்காகவும், இங்கேயே வீடு கட்டி வசிக்கிறோம். நெடுஞ்சாலையோரத்தில் பண்ணை இருக்கிறதால, விளைபொருள்களை விற்பனை செய்யவும் வசதியா இருக்கு. இந்த வழியா வாகனங்களில் பயணிக்கிறவங்க மா, பலா, அன்னாசி உள்ளிட்ட பழங்களை வாங்கிட்டுப் போறாங்க. இப்போ வரைக்கும் வீட்டில் வச்சிதான் விளைபொருள்களை விற்பனை செய்றோம். இப்போதான், விற்ப னைக்காக ஒரு கடை கட்டிட்டு இருக்கோம்.
இப்போதைக்கு தேன், நாட்டுக்கோழி, பழங்கள் மூலமா கணிசமான வருமானம் கிடைச்சுட்டிருக்கு. டிம்பர் மரங்கள் மூலமா எதிர்காலத்தில் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி விடைகொடுத்தார்.
பழனிச்சாமி சொல்லும் வருமானக் கணக்கு!
பழ மரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொன்ன பழனிச்சாமி, “பாலூர்-1, பாலூர்-2, சங்கரா சிவப்பு, சிந்து, செங்கைவரிக்கா, ஹலிஜாக்னு 40 ரகங்களைச் சேர்ந்த 200 பலா மரங்கள் இருக்கு. இதில் 120 மரங்கள் காய்ப்பில் இருக்கு. ஒரு மரத்திலிருந்து வருஷத்துக்கு சராசரியா 20 காய்கள் வீதம் மகசூல் கிடைக்குது. ஒரு காய் சராசரியா 15 கிலோ எடை இருக்கும். ஒரு கிலோ 10 ரூபாய்னு விற்பனை செய்யுறேன். இந்தக் கணக்கில் ஒரு வருஷத்தில் ஒரு பலா மரம் மூலம், 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. மொத்தம் 120 மரங்கள் மூலம், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
மொத்தம் 2 ஆயிரம் அன்னாசிச் செடிகள் இருக்கு. அதிலிருந்து வருஷத்துக்கு ஒரு டன் பழங்கள் மகசூல் கிடைக்குது. ஒரு கிலோ 120 ரூபாய்னு விற்பனை செய்யுறது மூலமா, வருஷத்துக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிது.
மிளகுச் சாகுபடி மூலம், வருஷத்துக்கு குறைந்தபட்சம் 15 கிலோ கருமிளகு கிடைக்குது. ஒரு கிலோ 1,000 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா வருஷத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. மா, சப்போட்டா, சீத்தா, பப்பாளி, வாட்டர் ஆப்பிள், ஸ்டார் ஃப்ரூட் உள்ளிட்ட இதர பழ மரங்கள் விற்பனை, நாட்டுக்கோழி, தேன், மரக்கன்று விற்பனை மூலம் ஒரு வருஷத்துக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
அந்த வகையில் இந்த ஐந்தரை ஏக்கர் பண்ணையிலிருந்து வருஷத்துக்கு மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதில் வருஷத்துக்கு 1 லட்ச ரூபாய் செலவு போக, 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிகரலாபமா நிக்குது” என்றார்.
மகன் கொடுத்த ஆலோசனை!
“இந்தத் தோட்டம் இவ்வளவு செழிப்பா உருவாகி, வெற்றிகரமா விளைச்சல் கொடுக்கிறதுக்கு என் மகன் திருமலையின் பங்களிப்பும் ஒரு முக்கியக் காரணம். உயிரியல் துறையில் பட்டம் வாங்கிட்டு நாகாலாந்தில் இருக்கிற ஒரு உயிரியல் பூங்காவில் எட்டு வருஷம் வேலை பார்த்தார். அவர் சொல்லும் ஆலோசனைகளையும் பின்பற்றிக்கிட்டு இருப்பதால்தான் தோட்டம் செழிப்பா இருக்கு” என்கிறார், பழனிச்சாமி.
முதிர்ச்சி அடைந்தால் நல்ல விலை கிடைக்கும்!
“தேக்கு, வேங்கை, கடம்பு, இலுப்பை உள்ளிட்ட டிம்பர் மரங்களை 15 வருஷம் வரைக்கும் வளர்த்தால் போதும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. அப்படி சீக்கிரமே வெட்டி விற்பனை செய்யுறப்போ நல்ல விலை கிடைக்காது. குறைஞ்சது 20-25 வருஷத்துக்கு மேல் வளர்க்கணும். அப்போதான் மரங்கள் முதிர்ச்சி அடைஞ்சு வைரம் பாயும். நல்ல விலையும் கிடைக்கும். அத்தனை வருஷங்கள் வளர்க்கும்போது மரங்களிலிருந்து உதிரக்கூடிய இலை தழைகளால் மண் வளமாகும். நிறைய ஆக்சிஜன் கிடைக்கும். இங்கே பெரும் பாலான மரங்களுக்கு இப்ப 20 வயசாகுது. ஆனாலும் நான் அறுவடை செய்யுறதா இல்லை. எனக்குப் பின்னாடி, என் மகனும், பேரப்பிள்ளைகளும் பயன் அடைஞ்சா போதும்கிறதுதான் என்னோட நிலைப்பாடு. அதுவரைக்கும் இந்த மரங்கள் காற்றைச் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்கட்டும். மரங்கள் மூலம் கிடைக்கிற நிழலில் பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகள் இளைப்பாறட்டும்” என்கிறார், பழனிச்சாமி.
