Lifestyle and human interest
உலக அழகிப்போட்டி; சாதனை படைத்த தமிழ்ப்பெண்

வியட்நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி ’மிஸ் வேர்ல்டு’ உலக அழகிப் போட்டி தொடங்கியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நிகிதா போர்வால் உட்பட 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (05-09-26) இப்போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவுகள் நள்ளிரவு நேரத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், டோமிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா டொமிங்குவேஸ் முதல் இடத்தை பெற்று ‘உலக அழகி’யாக மகுடம் சூடினார்.
அதே போல, ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னஸ் அலபர்ன் இரண்டாம் இடத்தைப் வென்றார். இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த தனுசியா (24) மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஏறத்தாழ ஒரு மாத காலம் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகெங்கிலுமிருந்து பங்கேற்ற போட்டியாளர்களில், தனுசியா தொடக்கம் முதலே சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்தார்.
தனுசியாவின் தாய்மொழி தமிழ் ஆகும். 14 வயதில் தாயை இழந்த தனுசியாவை, அவரது தந்தை வீரபாண்டியன் மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் வளர்த்து வந்தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் முன்னதாக ‘மிஸ் மலேசியா’ பட்டம் வென்ற தனுசியா, தற்போது மிஸ் வேர்ல்டு போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இது ஒட்டுமொத்த மலேசியாவிற்கும் பெருமை என்று அந்நாட்டு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கடந்த 1998-ம் ஆண்டு லீனா தியோ பெற்ற சாதனையை தனுசியா சமன் செய்த நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்குக் கிடைத்த மிகச்சிறந்த பெருமை இதுவாகும்.
போட்டியில் வென்ற தனுசியா ஆங்கிலம், மலாய், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் பேசி போட்டி நடுவர்களையும், உலகளாவிய பார்வையாளர்களையும் ஈர்த்தார். இவர் ஏற்கனவே, சமூக நலப்பணிகளுக்கான மதிப்புமிக்க 'பியூட்டி வித் எ பர்பஸ்' விருதை வென்றிருந்தார். அதே போல, ’பி த சேஞ்ச் மலேசியா’ என்ற அமைப்பின் மூலம் ஏழை மற்றும் உரிமை மறுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் ஊக்கமளிக்கும் உதவிகளையும் இவர் செய்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)