Arts, culture, entertainment and media
சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்
விழுப்புரம்: முறையாக ஊதியம் வழங்கக்கோரி, டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில், டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த நிறுவனம் மூலம் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் இறக்கும் பணி செய்து வருவதாகவும், தற்போது முறையாக ஊதியம் வழங்கவில்லை.
ஒப்பந்த நிறுவனம் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கடந்த, 1ம் தேதி முன்புவரை ஒரு பெட்டிக்கு 5 ரூபாய் இறக்குவதற்கு கொடுத்து வந்தனர். டேமேஜ் பாட்டிலுக்கு நாங்கள் கடை சேல்ஸ்மேனிடம் பணம் கொடுத்து வந்தோம். ஆனால், தற்போது பாட்டில் இறக்குவதற்கு பணம் கொடுப்பதில்லை. கடைக்கு ஏற்றிச்செல்லும் பெட்டிக்கு 10 ரூபாய் வழங்கவும், டேமேஜ் பாட்டிலை டிரான்ஸ்போர்ட் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களின் போராட்டத்தால் நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில் ஏற்றிச் செல்லும் பணி பாதிக்கப்பட்டது.