Lifestyle and human interest
தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நாளிதழ்

சென்னை: 'தினமலர்' பவள விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஊடகத்துறையில் நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டு, உலகில் உள்ள கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு, அவர்களின் நம்பிக்கையை தொடர்ந்து 75 ஆண்டுகளாக பெற்று, சிறப்பான சமூக சேவையை ஆற்றி நற்பெயர் பெற்றுள்ள 'தினமலர்' நாளிதழ் பவள விழா கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கால மாற்றங்கள் பல ஏற்பட்டாலும், உண்மைத்தன்மை சிறிதும் மாறாமல், உண்மைகளை ஊரறியும் வண்ணம் உரக்கச் சொல்லி, ஏராளமான வரலாற்றுச் சுவடுகளை பதிவு செய்து, பல தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற, தினமலர் நாளிதழின் சமூக சேவை மென்மேலும் தொடர்ந்து நுாற்றாண்டு விழா காண வாழ்த்துகிறேன்.
சமூக அநீதிகளை களையும் வண்ணம், சமரசமின்றி சளைக்காமல் செய்திகளை வெளியிடுகிற ' தினமலர்' நாளிதழின் வீரப்பயணம் தொடரட்டும். பவள விழாவை முன்னிட்டு, நினைவு தபால் தலையை துணை ஜனாதிபதி வெளியிட்டிருப்பது, 'தினமலர்' நாளிதழின் பெருமைக்கு மகுடம் சூட்டுவது போன்றது. தினமலரின், 75 ஆண்டு கால சரித்திர சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்கும் நிர்வாகத்தினர், ஆசிரியர் குழுவினர், பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.