Crime, law and justice
மதுரை பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்; தரதரவென இழுத்துச் சென்ற போலீஸார்

மதுரை 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்செல்வனின் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் பல்வேறு போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் 9 நாட்களாக தமிழ்செல்வனின் உடலை வாங்க மறுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பியவாறும், கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட செல்ல ஓடியபோது காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலரை காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்தபோது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கைது நடவடிக்கையின்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டன.
போராட்டம் காரணமாக காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக மதுரை அழகர் கோவில் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
