Politics
“காலம் கனிந்திருக்கிறது” - தூய்மைப் பணியாளர்களின் போரா*ட்டம் தொடர்பாக அமைச்சர் பேட்டி!

தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த் அவர்கள், ஆதவ் அர்ஜுனா, சி. டி. ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன் முன்னிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை இன்று (04.09.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ்.சமீரன், உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “சட்டமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர், சுதந்திர இந்தியாவிற்காக அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிக் கொடுத்து, சட்டத்துறை அமைச்சராகி, வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு ஒரு இடத்தை அடைந்தார். ஆனால், தான் நினைத்த அளவிற்கு பெண்களுக்கான உரிமைகளை உறுதி செய்ய முடியவில்லை என்பதால், அத்தகைய பதவி தனக்கு வேண்டாம் என்று கூறி அந்தப் பதவியைத் தூக்கி எறிந்தார்.
இன்று நடைபெற்ற கூட்டமும், 16 நாட்கள் நடைபெற்ற போராட்டமும், அதற்கு முந்தைய ஆட்சியில் 150 நாட்கள் வரை நடைபெற்ற போராட்டங்களும் எதற்காக என்றால், இதில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய உழைக்கும் பெண்களின் அடிப்படை உரிமைகளை எப்படி நிறைவேற்றுவது என்பதற்காகத்தான். தங்களுடைய அடிப்படை உரிமைகளைக் கோரி போராடக்கூடிய அந்தப் பெண்களுக்கு போராடுவதற்கான உரிமையையும், இடத்தையும் கொடுத்தது முதல், அவர்களை அழைத்து இங்கே பேசியது வரைக்கும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இதில் இரண்டு வகையான சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
முதல் சிக்கல் நிதி சிக்கல். இரண்டாவது சிக்கல் நிர்வாக சிக்கல். இந்த இரண்டு சிக்கல்களையும் பேசி தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே கிடையாது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையைப் பேசி தீர்க்கிறோம். இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளையும் பேசி தீர்க்கிறோம். அப்படியிருக்கும்போது, உழைக்கும் மக்களின் பிரச்சினையைப் பேசி தீர்க்க முடியாதா? முடியும். அதற்காக உட்கார்ந்து பேசுவதற்கு எந்தவித முன்முடிவும் எடுக்காத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தவறான பாதைக்கு செல்லாமல் தொழிலாளர்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட போராட்ட அமைப்புகளும் தேவை. அதற்கான காலம் கனிந்திருக்கிறது.
இந்த 16 நாட்களிலும் பேசியது என்னவென்றால், ‘அப்படி செய்துவிடுவார்கள், இதை செய்துவிடுவார்கள், போராட்டத்தை சீர்குலைத்துவிடுவார்கள்’ என்று நிறைய பேர் சொன்னார்கள், எழுதினார்கள். ஆனால், அப்படி எதுவுமே நடைபெறவில்லை. பொது அமைதிக்கு எந்தவித குந்தகமும் விளைவிக்காமல், தங்களுடைய தூய்மைப் பணியையும் கைவிடாமல், இங்கே வந்து நான்கு மணி நேரம் போராடினார்கள். மீதமுள்ள நேரத்தில் சென்று அனைத்து திடக்கழிவுகளையும் நிர்வகித்தார்கள். எந்த வகையிலும் போக்குவரத்துக்கு அவர்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை.
சொன்ன சொல்லுக்கு இணங்க அவர்கள் சரியாகப் போராடினார்கள். இதற்காக அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், உங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு உங்களுக்கு இடம் இருக்கிறது. நீங்கள் போராடும்போது எந்தவித பலப்பிரயோகமும் செய்ய மாட்டார்கள். காவல்துறையினரால் எந்தவித இடையூறும் இருக்காது என்று நாங்கள் கூறியிருந்தோம். நாங்கள் கூறிய அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறோம். இன்று நடைபெற்ற கூட்டம் மிகவும் விரிவாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.
போராட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதில் வழக்கறிஞர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்டோர் சென்று அலைந்து திரிவது மிகப்பெரிய அலைச்சல். ஆனால், இதை உடனடியாக இந்த இடத்திலேயே நான் சொல்கிறேன். இன்று உடனடி இலக்குகள் என்று சிலவற்றை வகுத்து, அவற்றை எழுதி வைத்திருக்கிறோம். அதற்கான உத்தரவுகள் அனைத்தும் தயாராகி வருகின்றன”எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


