Politics
“சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன?” - வெளியான முழுத் தகவல்!

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி, பல கோடி மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று (16.09.2026) சோதனை நடத்தினர். இந்நிலையில் சென்னை மற்றும் திருச்சியில் நடைபெற்ற சோதனையில் சொத்து ஆவணங்கள் மற்றும் மின்னனு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, டிடிசிபி (DTCP) அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 எதிரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், பல்வேறு நபர்களிடம் விசாரணை செய்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்று (16.09.2026) அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னையில் 2 இடங்கள் மற்றும் திருச்சியில் 2 இடங்கள், அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்மந்தமாக 118 ஆவணங்கள், செல்போன்கள்-18, லேப்டாப் - 3, பென்டிரைவ் - 8, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் (ஹார்ட் டிஸ்க் உடன் ) - 2, டேப்லெட் - 1, ஆப்பிள் ஐபேட் - 1 (Laptop-3, Pendrive-8, Desktop (inbuild Hard Disk)-2, Tablet-1, Apple I pad -1) கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து, விசாரணை செய்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





