Arts, culture, entertainment and media
சுஷாந்த் சிங் மேலாளர் திஷா மரணம்: FIR-ல் உத்தவ் தாக்கரே மகன், நடிகை ரியா பெயர் சேர்ப்பு

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே பெயர் இடம் பெற்று இருக்கிறது.
மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மர்மமான முறையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துப் போனார்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு முன்பு அதாவது 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி அவர் மும்பை புறநகர் பகுதியில் உள்ள மலாடில் தான் வாங்கி இருக்கும் வீட்டைப் பார்க்க சென்ற போது அடுக்குமாடி கட்டிடத்தில் 14வது மாடியில் இருந்து விழுந்து இறந்துப் போனார்.
இந்த மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து திஷாவின் தந்தை இவ்வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆன பிறகு தனது மகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூட தங்களுக்குத் தரப்படவில்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திஷா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்குக் கடந்த 2ம் தேதி உத்தரவிட்டது. ஆறு ஆண்டுகளாக எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறியதற்காக மும்பை காவல்துறையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து இருந்தது.
போலீஸாரின் விசாரணை பதில்களை விட அதிகமான கேள்விகளை எழுப்புகிறது என்றும் விசாரணையில் வெளிப்படையான முரண்பாடுகள் இருக்கிறது என்றும் கோர்ட் தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் சமீபத்தில் திஷாவின் தந்தை சதீஷ் சாலியன் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் பலர் சதி செய்து இக்குற்றத்தை மூடி மறைப்பதில் முக்கியப் பங்காற்றினர் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை, குற்றச் சதி, சாட்சியங்களை அழித்தல், தவறான தகவல்களை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், ஆதித்ய தாக்கரேயின் தந்தையான உத்தவ் தாக்கரே மற்றும் பலர் சதி செய்து குற்றத்தை மூடிமறைப்பதில் முக்கியப் பங்காற்றினர். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், வழக்குத் தாள்கள், கோப்புகள் மற்றும் பிற பொதுப் பதிவுகளை அழித்தது, ஆவணங்களை மூடி மறைத்தது, போலி ஆவணங்களைத் தயாரித்தல், குற்றவாளிகளைப் பாதுகாத்தல் போன்ற சம்பவங்கள் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் முதல் தகவல் அறிக்கையில், ஆதித்யா தாக்கரே, டினோ மோரியா, சூரஜ் பஞ்சோலி, நடிகை ரியா சக்ரவர்த்தி, தாமதமான பிரேதப் பரிசோதனையில் தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் விசாரணை தேவைப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
முன்னதாக இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுக்கும்படி போலீஸாரிடம் சி.பி.ஐ கேட்டுக்கொண்டது.
பா.ஜ.க நீண்ட நாட்களாக இவ்வழக்கில் ஆதித்ய தாக்கரேயிக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி வந்தது. தற்போது ஆதித்ய தாக்கரே பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கிறது. இதனால் எந்நேரமும் சி.பி.ஐ விசாரணைக்காக ஆதித்ய தாக்கரேயை அழைக்கலாம் என்றும், அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
