Politics
“கழிவறை, மாஸ்க், கையுறை தருவதாக அரசு உறுதி” - பேச்சுவார்த்தைக்குப் பின் தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முந்தைய அரசுகள் கஜானாவை காலியாக்கிவிட்டதாகவும், இருப்பினும் கலந்து பேசி உங்களது கோரிக்கை படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர்கள் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்பு, அமைச்சர்களுடன் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “உணவுப்படி அடுத்த மாதத்தில் இருந்து தருவதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். 200 வார்டுகளில் கழிப்பறை, ஓய்வறை வசதிகளை கேட்டுக் கொண்டிருந்தோம். அதை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 197 வார்டுகளில் 100 சதவீதம் செய்து கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். 3 வார்டுகளில் மட்டும் இடம் இல்லாமல் இருப்பதால் அதற்கு மாற்று இடத்தை முடிவு செய்து அதை செய்வதாகக் கூறியிருக்கிறார்கள். கடந்த 184 நாட்களில் நாங்கள் போராடிய போது தொழிலாளர், தொழில்சங்க தலைவர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் தமிழக அரசு திரும்ப பெறுவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.
மண்டலம் 4,7,8 இல் புதிய வாகனம் கிடையாது, 10 வருடத்திற்கு முன்பு வாகனங்களில் பிரச்சனை இருக்கிறது. அதனால் இந்த மூன்று மண்டலங்களில் புதிய 300 வாகனங்களில் 160 வாகனங்கள் 1 மாதத்துக்குள் வழங்குவதாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு இழப்பீடு தருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். மழை காலத்துக்கு முன்பே ரெயின் கோட், வாகனங்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் வரும் சொல்லிருக்கிறார்கள். வாரத்துக்கு 1 கையுறை, 1 நாளைக்கு 2 மாஸ்க் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, தினக்கூலி ரூ.832 ஆகிய கோரிக்கைகளை பேசி அடுத்தக் கூட்டத்துக்குள் சொல்வதாகக் கூறியிருக்கிறார்கள்.
2 மாதத்திற்குள் ஒரு முறை கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் அதிகாரிகளிடம் பேசி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 3 நடத்துவோம் என சொல்லிருக்கிறார்கள். முதல்வரை நிச்சயமாக சந்திக்க வைக்கிறோம் எனவும் கூறியிருக்கிறார்கள். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது நல்ல செய்தி வரும் என சொல்லிருக்கிறார்கள். நாங்கள் அக்டோபர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தையை உற்று நோக்கி எதிர்ப்பார்க்கிறோம். அதனால் இந்த போராட்டம் இப்போது தள்ளிவைக்கப்படுகிறது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


