Religion
மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் காண ஆன்லைனில் முன்பதிவு இன்றிரவு வரை விண்ணப்பிக்கலாம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், செப்., 17ல் நடப்பதை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை பூஜை துவங்கியது.
இக்கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின், செப்., 17 காலை, 7:40 மணி முதல், 8:10 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை, முதல் கால யாகவேள்வி துவங்கியது. கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கானோர் வருவர் என்பதால், அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் மேல்தளத்தில் இருந்து காண வி.வி.ஐ.பி.,க்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட 7,000 பேருக்கு, ஏழு வகை 'பாஸ்' வழங்கப்படுகிறது. 2,000 பேர் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் வழியாக இன்றிரவு, 9:00 மணி வரை முன்பதிவு செய்யலாம். ஒருவர் அதிகபட்சம், இரண்டு 'பாஸ்' பெற விண்ணப்பிக்கலாம். கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவோருக்கு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். செப்., 14 மாலை, 6:00 மணிக்குள் அதை காண்பித்து, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில், யாத்ரி நிவாஸ் அலுவலகத்தில் 'பாஸ்' பெற்றுக்கொள்ளலாம்.