Politics
“லண்டனில் வேறு வேலை பார்க்கிறார் விஜய்!” -ராஜேந்திர பாலாஜி சுளீர்!

சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, “விஜய் விபத்தில் முதலமைச்சரானவர். 107 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 106 சீட்டுகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன. தவெக ஓட்டுச்சுவரில் உலை வைத்துக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் சுவர் விழும் என்பதே தெரியாது. ஆட்சி நீடிக்குமா, நிலைக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு விஜய் இருக்கிறார். அதற்குள் ஏன் இவ்வளவு ஆட்டம், இத்தனை ஆர்ப்பாட்டம்?
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல், மூன்று நாட்கள் கழித்துத்தான் பதில் சொல்வேன் என்று கூறி, எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி, அதை சட்டமன்றத்தில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டுச் சென்றுள்ளார். தமிழக மக்களுக்குச் சொன்ன வாக்குறுதிகளைப் பற்றி கேள்வி கேட்டால், முதல்வர் அதைப் பற்றி பேசாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு குறித்து பேசி குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு செல்கிறார். சட்டமன்றத்தில் விஜயின் நாடகம் மட்டுமே நடக்கிறது. பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது.
சட்டமன்றத்தில் எந்த அமைச்சரும் ஒழுங்காகப் பேசுவதில்லை. வேளாண்துறை குறித்து கேள்வி எழுப்பினால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார். யார் யாரோ பதில் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட நிர்வாகம்தான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள்? பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும்? தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது. மூடப்பட்ட பட்டாசு ஆலைகளைத் திறக்க நாங்கள் குரல் கொடுத்தோம். பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள். தவெக ஆட்சியின் நிர்வாகக் கோளாறு காரணமாகவே வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதிமுகவின் போராட்ட அறிவிப்புக்குப் பிறகுதான் தவெக அரசு பட்டாசு ஆலைகளைத் திறந்துள்ளது.
தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால், அதை கண்டுபிடிக்க தனிக் குழு அமைத்துள்ளோம். லஞ்சம் வாங்கும்போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம். தவெகவினர் யோக்கியம் போல் நினைத்துக்கொண்டு அனைவரையும் குற்றம் சொல்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 2,500 ரூபாய் தருவதாக முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார். இதை யாரிடம் கேட்பது? லண்டனில் தொழில் முதலீடு செய்ய முதல்வரை அனுப்பினால், அவர் அங்கு சென்று முதலீடு ஈர்க்காமல் வேறு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த வேலையைச் செய்யவா இவரை முதல்வராகத் தேர்வு செய்தோம்? ஏன் விஜய்க்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்குத் தெரியவில்லை. தவெகவிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தவெகவினர் விபத்து நடந்த இடத்திலும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இடத்திலும் ரீல்ஸ் போடுகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றாமல் அங்கு சென்று ரீல்ஸ் போடுகிறார்கள். தவெகவில் ரீல்ஸ் பைத்தியங்களாக உள்ளார்கள். எங்கே போய் முடியப்போகிறது என்பதே தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின்வெட்டால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். தவெக ஆட்சி அவமானத்தின் ஆட்சியாக இருக்கிறது. இந்த ஆட்சி நாட்டுக்கு தேவையா என மக்கள் தற்போது பேசத் தொடங்கிவிட்டார்கள். தவெக விஜய் யாருக்காக உழைக்கிறார் என்றே தெரியவில்லை. எதற்காக முதல்வரானார் என்றே தெரியவில்லை. முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. மாலை 6 மணிக்கு மேல் முதல்வரை யாரும் பார்க்க முடிவதில்லை. ஒரு முதல்வரை 6 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என்றால், நாட்டில் என்ன பிரச்சனை என்பதை யார் கண்டறிவது? இடைத்தேர்தலில் தவெக எப்படி வெற்றி பெறுகிறது என்பதைப் பார்ப்போம். வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)