குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாக இருக்கு! அதிகாரிகள் அலட்சியத்தால் அதிருப்தி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர், அருட்செல்வபுரம், அப்துல்கலாம் நகர், பட்டத்தரசி நகர், யூனியன் நகர், யூனியன் விஸ்தரிப்பு, பிளாட்டினம் நகர், பவளம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக குடிநீர் வசதியில்லை.
இப்பகுதியில், குடிநீர் தொட்டி கட்டப்பட்டு காட்சிப்பொருளாக மாறியது. இச்சூழலில், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.
