பிரதமர் மோடிக்கு குவிந்த 1,498 பரிசுப் பொருட்கள்: இ-ஏலம் இன்று துவக்கம்!
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட 1,498 நினைவுப் பரிசுகளின் 8-வது கட்ட 'இ-ஏலம்' இன்று (செப்.,17) துவங்குகிறது. வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த ஆன்லைன் ஏலம் நடைபெற உள்ளது.
பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, பிரதமருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த அரிய கலைப் பொக்கிஷங்களை பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் ஏலம் எடுக்கும் வகையில், மத்திய அரசு ஆன்லைன் ஏலத்தை நடத்தி வருகிறது.
டில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆய்வு செய்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை நடைபெற்ற 7 கட்ட ஏலங்கள் வாயிலாக மொத்தம் ரூ.52 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் மத்திய அரசின் புனித நதியான கங்கையை தூய்மைப்படுத்தும் 'நமாமி கங்கை' திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சேகரிப்பாளர்களிடையே இந்த ஏலத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.




