திராவிட அரசியலில்எம்.ஜி.ஆர். எழுச்சி! டைரக்டர் -ரைட்டர் -வி.சி.குகநாதன் (26)
(26) கதை தேர்வில் எம்.ஜி.ஆர். எக்ஸ்பர்ட்!
1979ஆம் ஆண்டு இலங்கை அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ராஜதுரை, கதிர்காமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் துணை அமைச்சராக இருந்த ஐசரிவேலனையும், என்னையும் அழைத்திருந்தார். பத்தொன்பது ஆண்டுகள் என் தாய், தந்தையரைப் பார்க் காமல், திரையுலகில் பலமொழிப் படங்களில் ஓய்வில்லாமல் பணியாற்றிக்கொண்டிருந்த எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. எங்களுக்கு கொழும்பு விமானநிலையத்தில் நல்ல வரவேற் பளிக்கப்பட்டது. அமைச்சரே நேரில் வந்திருந்தார். அன்று மாலையே ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பலரின் அறிமுகம் கிடைத்திருந்தாலும், இலங்கை நயினார் சந்திப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் இலங்கை எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் பொரப்பாளராக இருந்தார். ரசிக மன்றம் சார்பாக பல நல்ல திட்டங்களைச் செய்துவந்தார். அதனால் எம்.ஜி.ஆரின் பாசத்திற்குரியவராகவும் இருந்தார். பிற்காலத்தில் நயினார், சென்னை வந்தால் என் அலுவலகத்தில் தங்கு வார். என் படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடிக்கவும் செய்தார். எமது நட்பு நீண்ட காலம் நீடித்தது. இது எம்.ஜி.ஆருக்கும் தெரியும்.
இலங்கை யில் எம்.ஜி. ஆருக்கு ஏராளமான ரசிகர்களிருக்கிறார்கள். அவரின் படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனைகள் படைத்திருக்கின்றன. 1917ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவரான எம்.ஜி.ஆர்., 1966ஆம் ஆண்டு ஒரு பத்திரிகை நிறுவனத்தின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றார். அவரை வரவேற்க கொழும்பு விமான நிலையத்தில் மக்கள் கடல் நாலாபுறமும் கூடி நின்றதைப் பார்த்தவர்கள், இப்படியொரு கூட்டத்தை இதுவரை நாம் கண்டதில்லை என வியந்தனர். எட்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த எம்.ஜி.ஆர். கண்டி, நுவெரேலியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மாத்தளை என அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
