அகர்கர் பதவி நீட்டிக்கப்படுமா? என்ன முடிவெடுக்கப் போகிறது பிசிசிஐ!
இந்திய அணியின் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் அக்டோபர் 4, 2026 உடன் முடிவடைகிறது. அவருடைய ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்த ஆலோசனைகளை பிசிசிஐ தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருப்பவர், அஜித் அகர்கர். ஜூலை 2023-இல் பொறுப்பேற்ற அகர்கரின் தலைமையிலான தேர்வுக் குழுவின் காலத்தில், இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. இது தவிர வேறு சில தொடர்களையும் வென்றுள்ளது. இந்தச் சூழலில், அகர்கரின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் அக்டோபர் 4, 2026 உடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே, பிசிசிஐ நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவரது ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க பிசிசிஐ ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், தற்போது தேர்வுக் குழுத் தலைவரை மாற்றுவது அணியின் எதிர்கால திட்டமிடலைப் பாதிக்கும் என்பதால் பிசிசிஐ அதிகாரிகள் அகர்கருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

