ரூ.1.8 கோடியில் கட்டப்பட்டு, 19 வருடங்களாகப் பூட்டிக்கிடக்கிறது!
இப்போது ரூ.2.22 கோடியில் சீரமைப்பு... கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் ‘கதை’!
பஸ் இல்லாத ஸ்டாண்ட்... பயணிகள் இல்லாத நடைமேடை... ஆனால், செலவுக்கு மட்டும் பஞ்சமில்லை. 2007-ல் திறக்கப்பட்ட கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம், 20 நாள்களிலேயே மூடப்பட்டு, 19 ஆண்டுகளாகக் காட்சிப்பொருளாகக் கிடக்கிறது. ரூ.1.8 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்துக்கு, இப்போது ரூ.2.22 கோடியில் சீரமைப்புப் பணிகள் முடிந்திருக்கின்றன. ``ஓடாத பேருந்து நிலையத்துக்கு எதற்காக இந்த ‘மேக்கப்’?’’ என்று மக்கள் கேட்க, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சொல்லும் பதில்கள் புதுப் புதுக் கேள்விகளை எழுப்புகின்றன!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊரின் மையப்பகுதியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் இயங்கிவருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் கோவில்பட்டி – மதுரை பைபாஸ் சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில், 2006-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, 3.97 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, 16.07.2007 அன்று தி.மு.க ஆட்சியில் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது.




