‘`இனி நீயும் நானுந்தான் சாமி...’’ ஒற்றைத் தகப்பனின் நம்பிக்கை... தலைநிமிர்ந்த வாழ்க்கை!
‘`திருமண உறவு சரியா வராத நிலையில அதுலேருந்து விலகுறதும், அதுக்குப் பிறகான வாழ்க்கையைத் தொடர்றதும் அதன் போக்குல இயல்பா நடக்கும். பயப்படத் தேவை யில்லை.
ரத்த பந்தங்கள் தொடங்கி, சக மனிதர்கள் வரை எல்லோர் மீதும் நம்பிக்கை அற்றுப்போன சுயநலமான காலத்தில் வாழ்கிறோம். ஆனால், அந்த நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஒற்றைத் தகப்பனாக மகனை வளர்த்து ஆளாக்கி, ஆகச் சிறந்த அப்பாவாக உயர்ந்து நிற்கிறார் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணியம். மகனுக்காக தன் விருப்பங்களை, கனவுகளைத் தியாகம் செய்தவர். இன்று தன் மகன் உயர்ந்த இடத்தில் நின்று தன்னைத் தாங்கும் அழகைக் கண்டு நெகிழும் இந்த எளிய மனிதரின் வாழ்க்கை அனுபவங்கள், மனித உறவுகள் மீதான நம்பிக்கையை மீட்டுத் தருகின்றன.
‘`சத்தியமங்கலம், புளியம்பட்டி பக்கத்துல உள்ள சின்ன கிராமத்துல வசிக்கிறோம். ஜவுளிக்கடையில வேலை பார்த்திட்டிருந்தேன். பெரியவங்க பார்த்துதான் எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. பத்து வருஷங்கள் நானும் என் மனைவியும் ஒண்ணா வாழ்ந்தோம். அப்புறம் சின்னதும் பெருசுமா எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல அதுக்கு மேல சேர்ந்து வாழறதுல அர்த்தமில்லைனு ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம். அப்போ எங்க ஒரே மகன் விஜய்க்கு எட்டு வயசு... பிரச்னைகளை ஆறப்போடுவோம்... கொஞ்ச நாள் கழிச்சு முடிவெடுப்போம்னு கூட அவங்க தரப்புல யோசிக்கலை. ‘பையனை நீங்களே வெச்சுக் கோங்க’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க...''
- உலகமறியா வயதில் ஒரு குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பை முழுமையாகச் சுமக்கத் தயாரான தருணம் யாருக்கும் வலித்திருக்கும். சுப்ரமணியமோ, அதை அளவு கடந்த அன்போடு ஏற்றிருக்கிறார்.

