ஆத்துார் அணையை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க கூடாது: திண்டுக்கல் நீண்டகால வறட்சிக்கு தள்ளப்படும் அபாயம்
திண்டுக்கல்:ஆத்துார் காமராஜர் அணையை பலவீனப்படுத்தும் முயற்சியாக அணைப்பகுதியை ஒட்டி புதிதாக கிணறுகள் வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி நீண்டகால வறட்சிக்கு தள்ளப்படும் அபாயம் உருவாகி உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியின் பிரதான குடிநீர் ஆதாரமாக ஆத்துார் காமராஜர் அணை உள்ளது. 420 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணையில் 325 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. 23.5 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இருந்து தினசரி 14 முதல் 15 எம்.எல்.டி., நீரை சுத்திகரித்து மாநகராட்சி சப்ளை செய்தது.
இதற்காக அணைக்கு அருகே மாநகராட்சி சார்பில் 7 உறை கிணறுகள், 10 போர்வெல், நீர் உந்து நிலையம் உள்ளன. அணையில் இருந்து 30 கி.மீ., தொலைவில் திண்டுக்கல் உள்ள நிலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள வழித்தட கிராமங்கள், பேரூராட்சிகளான ஆத்துார், வக்கம்பட்டி, ஆரியநல்லுார், பிள்ளையார் நத்தம், சின்ன பள்ளப்பட்டி, பெரிய பள்ளப்பட்டி, பித்தளைப்பட்டி பகுதிகளுக்கு கூடுதலாக 1 முதல் 5 எம்.எல்.டி., நீரை மாநகராட்சி வழங்கியது.

