முடங்கிய பெங்களூரு விரைவு சாலை திட்டத்திற்கு... புது டெண்டர்!ரூ.633 கோடியில் அரக்கோணம் - பரந்துார் வரை பணி
காஞ்சிபுரம்: ஒப்பந்ததாரர் ஓட்டம் பிடித்ததால், சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலையில், ஓராண்டுக்கு மேலாக முடங்கியுள்ள அரக்கோணம் - காஞ்சிபுரம் பரந்துார் இடையிலான, 25.5 கி.மீ., சாலை பணிகளை மீண்டும் தொடங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 633.12 கோடி ரூபாக்கு புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளை, 18 மாதங்களில் முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், சென்னை - பெங்களூரு விரைவு சாலை மேம் படுத்தப்பட்டு வருகிறது. இந்த விரைவு சாலை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தில் நுழைந்து, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் வரை செல்கிறது.
25.5 கி.மீ., சாலை விரைவு சாலை திட்டத்தின் மூன்றாவது பகுதியாக, தமிழகத்தில் அரக்கோணம் - காஞ்சிபுரம் பரந்துார் வரை, 25.5 கி.மீ., நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.
இதில், 17.4 கி.மீ., ராணிப்பேட்டை மாவட்டத்திலும், 8.1 கி.மீ., காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. அரக்கோணம் தாலுகாவில் கர்ணவூர் அருகே தொடங்கும் இந்த சாலை, காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பரந்துார் வருவாய் கிராமம் அருகே முடிகிறது.




