பெண்கள் வாழ தகுதியான மாநிலம்தானா தமிழகம்?
இந்தச் சமூகத்தில் பெண்களைச் சீண்டுவதையும், தாக்குவதையும், ஒடுக்குவதையும், சுரண்டுவதையும் ஆண்கள் தங்களின் ஏகபோக உரிமையாகவே கருதுகின்றனர். அப்படித்தான் குடும்பங்கள் அவர்களை வளர்த்தெடுக்கின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருநூற்றுக்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதாகவும், அவற்றில் பாதிக்குப் பாதி குழந்தைகள் மீதானவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால், அது வெறுமனே ஆட்சி மாற்றத்தால் நிகழவில்லை. தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் தரவுகளின்படி, 2021 - 2024 (2025-ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்படவில்லை.) வரையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1,689 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 20,871 போக்சோ வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல 2016-2020 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1,684 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், சுமார் 10,000 போக்சோ வழக்குகளும் பதிவாகி யுள்ளன. `தி.மு.க ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த த.வெ.க ஆட்சியிலும் பாலியல் வன்கொடுமை களுக்குப் பஞ்சமில்லை.
பச்சிளம் குழந்தை தொடங்கி மூதாட்டி வரை, மாணவி முதல் ஆசிரியை வரை, நோயாளி தொடங்கி மருத்துவர் வரை, கான்ஸ்டபிள் தொடங்கி ஐ.பி.ஸ் வரை, கடைநிலை அலுவலர் தொடங்கி உயரதிகாரி வரை, ஏழை முதல் பணக்காரர் வரை, தொண்டர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முதல் ஆதிக்கச் சாதி வரை இந்தச் சமூகத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு அப்பாற்பட்டவராக இல்லை.




