திருச்சியில் 2ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்: இன்று கஞ்சித் தொட்டி திறக்கவும் முடிவு
பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சி அருகே விவசாயிகள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உழவா் உரிமை இயக்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 49 சங்கங்கள் இணைந்து சமயபுரம் அருகே இப் போரராட்டத்தை நடத்தி வருகின்றன.



