தண்ணீர் திறக்காவிட்டால்... விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கணும்: மதுரை மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
மதுரை: ''மாவட்டத்தில் ஓராண்டாக ஒருபோக, இருபோக நெல் சாகுபடிக்கு தண்ணீரில்லை. செப்டம்பரில் தண்ணீர் திறக்காவிட்டால் வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்'' என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
2017 ம் ஆண்டுக்கு பின் மதுரை மாவட்டம் மீண்டும் வறட்சியை சந்தித்துள்ளது. பேரணை முதல் கள்ளந்திரி வரையான 45ஆயிரம் ஏக்கர் இருபோகத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 1, செப். 15 ல் வைகை அணையில் இருந்து பாசனத்தண்ணீர் திறக்கப்படும். அணையில் 4000 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தால் தொடர்ந்து 45 நாட்களுக்கும், அதன்பின் ஐந்து நாட்கள் திறப்பு, ஐந்து நாட்கள் அடைப்பு என 120 நாட்களுக்கு முறைப்பாசனம் வைத்தும் தண்ணீர் திறக்கப்படும்.
மேலுாரில் 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலத்தில் 19 ஆயிரத்து 500 ஏக்கருக்கான ஒருபோக பாசனத் தண்ணீர் செப். 15ல் திறக்கப்படும். ஒருபோக சாகுபடிக்கு அணையில் 6000 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தால் தான் தண்ணீர் திறக்கப்படும்.


