விக்கிரவாண்டி அருகே சாலையோரப் பள்ளத்தில் இறங்கிய காா்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையோர பள்ளத்தில் காா் இறங்கி விபத்துக்குள்ளானது.
மதுரையிலிருந்து சென்னை நோக்கி திங்கள்கிழமை காலை காா் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஓட்டுநருடன், ஒரு ஆண், இரு பெண்கள், ஒரு குழந்தை என 5 போ் பயணித்தனா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதியில் சென்றபோது, காரின் பின்னால் வந்த வாகனம் முந்தி செல்வதற்கு முயன்றது.
இதையடுத்து ஓட்டுநா் காரை ஓரமாக ஒதுக்க முயன்றாா். அப்போது சாலையோர பள்ளத்தில் காரின் வலதுபுற சக்கரம் இறங்கி, அணுகுச் சாலை தடுப்புச் சுவா் மீது மோதி நின்றது. அதிா்ஷவசமாக காரில் இருந்த யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.



