பதவி உயர்வு தரும் பரமேஸ்வரர்: திருவண்ணாமலைக்குச் செல்லுமுன் ஶ்ரீரமணர் வழிபட்ட சிவத்தலம்!
திருக்கோவிலூர் அருகில் சிறு குன்று போன்ற பாறையின் மீது அமைந்துள்ளது அந்த சிவாலயம். அங்கே அருளும் ஈசனை வழிபட்டால் வாழ்வில் ஏற்றமும் பதவி உயர்வும் நிச்சயமாம். இதை நாம் சொல்லவில்லை. திருஞான சம்பந்தர் தமது பதிகத்தில் அருளியுள்ளார்.
அறியாமையை நீக்கும் தலம்; இமயத்தில் வாழும் ரிஷிகளும் சித்தர்களும் வழிபடும் ஊர்; பதவி உயர்வும் வாழ்வில் ஏற்றமும் கிடைக்கும் இடம்; மூவுலகிலும் சிறப்பான நிலையை அடையும் பாக்கியத்தை அருளும் தலம் இது. இங்குள்ள ஈசனின் அருளால் வீண்பழிகள் அகலும்; ஜென்மாந்திர வினைகள் நீங்கும்!
சரக்கொன்றை மலர்களால் இங்குள்ள ஈஸ்வரனை அர்ச்சிக்க பெரும் புகழ் சேரும்; இவரை தரிசிக்கும் தருணத்திலேயே பாவங்கள் பொடிபடும்; சந்தேகங்கள் அறுபடும்; சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்; இந்த ஈஸ்வரனின் பொற்பாதங்களைப் பற்றிக் கொண்டால் வீடு பேறு கிடைக்கும்...’ - என்று, அறையணிநல்லூர் இறைவனை தரிசிப்பதால் கிட்டும் பலன்களை பட்டியலிடுகிறார் திருஞானசம்பந்தர்.



