மாதம் ரூ.3 லட்சம் கேக் விற்பனையில் பாதிக்கு பாதி லாபம்!
'கேக்' தயாரித்து, சமூக வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்து நிறைவான லாபம் ஈட்டும், தேனி மாவட்டம், அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த பிரியா:
எனக்கு ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை. ஏதாவது வேலைக்கு செல்லலாம் என்று, சிறிது நாட்கள் கிடைத்த வேலைக்கு சென்று வந்தேன். 18 வயதில் திருமணம் செய்து வைத்தனர். கணவர், டீக்கடையில் காசாளராக இருக்கிறார். அவர் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல், நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். கொரோனா ஊரடங்கில் எங்கள் நிலை மோசமானது.
'ஏதாவது சுயதொழில் செய்யலாமா?' என கேட்டதற்கு, 'தொழில் செய்யும் அளவிற்கு நம்மிடம் பணம் இல்லை; அப்படியே ஆரம்பித்தாலும், நஷ்டமடைந்தால் என்ன செய்ய...? அதெல்லாம் வேண்டாம்' என்று கணவர் கூறி விட்டார். இதனால், மகளிர் குழுவில் 25,000 ரூபாய் கடன் வாங்கி, 'கேக்' செய்ய கற்றுக் கொண்டேன்.

