விலைவாசி உயர்ந்தாலும் விடவில்லை தொழிலை... 22 ஆண்டுகளாக பணியாரம் சுடும் பாட்டி
கொரோனா காலத்திலும் பணியாரம் விற்பனை தொழிலை தொடர்ந்து வந்த நெல்லையை சேர்ந்த மூதாட்டி ஈஸ்வரி பெரிய அளவில் லாபம் கிடைக்காவிட்டாலும் யாரிடமும் கையேந்தாமல் தனது உழைப்பிலேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த நிலையிலும் யாரிடமும் கையேந்தாமல் தனது உழைப்பின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மூதாட்டி ஈஸ்வரி. கடந்த 22 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் இனிப்பு பணியாரம் தயாரித்து விற்பனை செய்து வரும் இவரது உழைப்பும் தன்னம்பிக்கையும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
வாழ்வாதாரத்திற்காகவும் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளை ஈடுகட்டவும் தினமும் மாலை நேரத்தில் பணியாரம் சுட்டு விற்பனை செய்து வருகிறார் ஈஸ்வரி. இவர் தனது வியாபாரத்தைத் தொடங்கியபோது ஒரு பணியாரம் 50 காசுக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் 75 காசு, ரூ.1.25, ரூ.1.50 என படிப்படியாக விலை உயர்ந்த நிலையில், தற்போது 4 பணியாரங்கள் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகிறார். விலை மாற்றம் ஏற்பட்டாலும், பணியாரம் சுடும் தொழிலை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.



