செலவுகளைக் குறைத்து மேன்மையைக் கூட்டுவாரா முதல்வர்?
ஈரான் மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை அடுத்து, உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல், இந்தியாவையும் பாதிக்கும் என்று அனுமானிக்கப்பட்டது.
தமிழகத்தின் நிதி நிலைமையின் யதார்த்தம் புரிந்து, அனைவரும் அரசோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் நிலையில், த.வெ.க அரசின் சமீபகால நடவடிக்கைகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆட்சிக்கு வந்தே இரண்டே மாதங்களில் 22 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கிய த.வெ.க அரசு, மூன்று மாதங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்திருப்பதாக அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்காகத் தண்ணீர் திறந்து விடுவதற்காக, சில நாள்களுக்கு முன்பு சென்று திரும்பியிருக்கிறார், முதல்வர். மேட்டூர் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியிருப்பதற்காக அரசுத் தரப்பில் செலவிட்டதாகச் சொல்லப்படும் தொகை மூச்சு முட்டவைக்கிறது. தொடக்கத்தில் மேட்டூர் பயணத்துக்கு 4.5 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது அது 6 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது.
அதாவது, முதல்வர் செல்லும் பாதையில் 40 கிலோமீட்டர் தூரத்துக்கு, சாலையின் இருபுறமும், சாலைக்குள் மக்கள் வராமல் பார்த்துக்கொள்வதற்காக இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காகவே இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் சொல்கின்றனர்.


