நொய்டாவில் தொடங்கியது கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சி; பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,100 நிறுவனங்கள் பங்கேற்பு
கிரேட்டர் நொய்டா: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நடக்கும், இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சியின், எட்டாவது எடிஷன், உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள, 'இந்தியா எக்ஸ்போ மார்ட்' மையத்தில், நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி, வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 14.5 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் நடக்கும் கண்காட்சியில், ஐந்து வெளி அரங்கங்கள் மற்றும் 12 உள் அரங்கங்கள் என, 17 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகளவில், 1,100க்கும் அதிகமான நிறுவனங்கள், இதில் பங்கேற்றுள்ளன. கடந்த முறை 51,118 பார்வையாளர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்ட நிலையில், இம்முறை 100க்கும் அதிகமான நாடுகளில் இருந்து, 75,000க்கும் அதிகமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

