ரயில் டிக்கெட்; ஸ்டேஷனில் குழப்பம்
திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு முறைகளில் டிக்கெட் பெறும் வசதி இருந்தும், தெளிவான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில் இதுவரை 'கவுன்டரில்' பணம் செலுத்தி டிக்கெட் பெறும் நடைமுறை இருந்து வந்த நிலையில், தற்போது புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே டிக்கெட் வாங்க முடியும். பணம் செலுத்தி டிக்கெட் பெற விரும்பும் பயணிகள், 'வெண்டிங் மெஷினில்' வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆலப்புழா - தன்பாத் ரயிலில் பயணிக்க, 200க்கும் மேற்பட்ட வடமாநில பயணிகள் டிக்கெட் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பணம் செலுத்தி டிக்கெட் பெற்ற பின் ரயிலில் பயணத்தை தொடர்ந்தனர்.


