உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டி வாய்ப்பு நிதியின்றி தவிக்கும் சென்னை வீராங்கனை அரசிடம் உதவி கோரி காத்திருப்பு
சென்னை: உலக அரங்கில் நாட்டிற்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தும், நிதி நெருக்கடியால் சென்னை ‘ரோலர் ஸ்கேட்டிங்’ வீராங்கனை கோபிகா, 18, பரிதவித்து வருகிறார். சாதிக்கும் முனைப்பில், போட்டி செலவுகளுக்காக தமிழக அரசிடம் நிதி கோரி காத்திருக்கிறார்.
தி.நகரைச் சேர்ந்த செல்வராஜ்; ஜிம் பயிற்சியாளர். இவரது மகள் கோபிகா, 18. சிறு வயது முதலே ரோலர் ஸ்கேட்டிங், ஸ்ட்ரெங்த் லிப்டிங், பவர் லிப்டிங், மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் குவித்து வருகிறார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், அக்., 29 முதல் செப்., 2 வரை நடந்த உலக ஸ்கேட்டிங் போட்டிக்கான தேர்வு போட்டியில், கோபிகா பங்கேற்றார். கடுமையான போட்டிகளுக்கு இடையே தன் திறமையை நிரூபித்த அவர், தென் அமெரிக்க நாடான பராகுவேயில் நடைபெற உள்ள உலக ஸ்கேட்டிங் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


