பொது சுத்திகரிப்பு நிலையம் 20 ஆண்டு பிரச்னைக்கு த.வெ.க., தீர்வு காணுமா
பள்ளிப்பாளையம்:தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில், பொது சுத்திகரிப்பு நிலைய திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், த.வெ.க., அரசாவது தீர்வு காணுமா என, குமார பாளையம், பள்ளிப்பாளையம் பகுதி சாய ஆலை உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான சாய ஆலைகள், அரசு விதிகளை பின்பற்றாமல், சாயக்கழிவுநீரை நேரடியாக காவிரி ஆற்றில் திறந்துவிடுகின்றன. இதனால் தண்ணீர் மாசடைந்து, அதை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.
குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, விதிமீறும் சாய ஆலைகளை கண்டறிந்து, 'சீல்' வைப்பது, மின் இணைப்பை துண்டிப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், இதன் எதிரொலியாக, ஒரு மாதம்கூட தாக்குப்பிடிக்க முடியாத சாய ஆலை உரிமையாளர்கள், ஏதோ ஒருவழியில் மீண்டும் சாய ஆலைகளை இயக்க தொடங்கி விடுகின்றனர்.
