‘கிடா வெட்டி விருந்து வைத்தாலும் பத்தாது’ - ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டி தள்ளிய பிரபல இயக்குநர்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான படம் ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் காமெடி கலாட்டாவுடன் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே படத்தின் தலைப்பு பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் பட வெளியீட்டுக்கு முன்பு நடந்த டிரெய்லர் வெளியீட்டில் கார்த்திக் சுப்புராஜ், அயலான் ரவிகுமார், டியூட் கீர்த்தீஸ்வரன், பாரி இளவழகன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து சூரி, கார்த்திக் சுப்புராஜ், சிம்பு தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக படத்தை பாராட்டியிருந்தனர். தொடர்ந்து பலரது பாராட்டை பெற்று வரும் இப்படத்தை தற்போது ‘நந்தன்’ இயக்குநர் இரா.சரவணன் பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இயக்குநர் சற்குணம் சாரின் ‘களவாணி’ படம் பார்த்த நாளில்தான் இப்படி வியந்து போனேன். கதை, களம், கதாபாத்திர வார்ப்பு என அத்தனையிலும் முத்தாய்ப்பு பண்ணுகிற படமாக என்னை கொண்டாட வைத்துவிட்டது ‘மொத ராத்திரி’ படம். இவர்கள் யாருமே நடிகர்கள் அல்ல… அப்படியே அந்தக் கிராமத்து மக்கள்…” எனச் சொல்கிற அளவுக்கு கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த விதம் மகத்தானது. அழகும் சிவப்பும் நாயக பிம்பமும் கொண்ட நட்சத்திரங்களின் பின்னால் அலையாமல், அவர்களின் தேதிக்காகக் காத்திருக்காமல் இயல்பு மாறாத மனிதர்களை அப்படியே திரையில் உலவ விட்டிருக்கிறார்கள். கதாநாயகன் ரிஷிகாந்த் சாதாரண ஒரு பையனாக நமக்கு அறிமுகமாகி, படிப்படியாக நம் மனதில் நின்று நெருக்கமாகி கலங்கடிக்கிறார். ‘சிறை’ படத்திலேயே நெஞ்சம் ஈர்த்த அனீஷ்மாவுக்கு இந்தப் படம் இன்னுமொரு மைல்கல். தத்தளிக்க வைக்கிற நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

