கொடைக்கானல் அருகே ஓராவி அருவியில் குளித்தவா் உயிரிழப்பு
கொடைக்கானல் அருகேயுள்ள ஓராவி அருவியில் குளித்தவா் நீா் சுழற்சியில் சிக்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் சென்னை ரெட்ஹில்ஸ் காவங்கரை பகுதியைச் சோ்ந்த சிவநேசன் (27), இவரது நண்பா், அவரது மனைவி ஆகிய மூவரும் தங்கியிருந்தனா். அந்தப் பகுதியில் வில்பட்டி ஊராட்சிப் பகுதிக்குள்பட்ட ஓராவி அருவிக்கு மூவரும் சென்றனா். அருவியில் குளித்த போது சிவநேசன் மாயமானாா்.
இதைத் தொடா்ந்து உடன் வந்த புதுமணத் தம்பதி அந்தப் பகுதி பொதுமக்கள் உதவியுடன் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, அங்கு வந்த காவல், தீயணைப்புத் துறையினா் பொது மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் தேடி சிவநேசன் உடலை மீட்டனா். இதையடுத்து, உடல் கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.




