இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (18)
நாகேஷ் இந்தப் பெயரை எழுதிய தாள்கூட சிரிக்கும். இது மிகையல்ல, நகைச்சுவைக்கென்றே திரையுலகத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட, வரவேற்கப்பட்ட ஒரு ஆளுமை நாகேஷ் அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி காலம் முதல் சிம்பு தனுஷ் காலம் வரை திரைத் துறையில் பலப்பல வேடங்களில் ஆட்சி செலுத்தியவர். இவருக்கும் அப்பாவுக்கும் உண்டான தொடர்பு ஒரு கதை. "மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தின் வெற்றிக்குப் பிறகு நாகேஷ் எப்படியாவது கே.பி.யுடன் சேர்ந்து பணி செய்ய விரும்பினார். அப்போதே அவர் பிரபல மான நகைச்சுவை நடிகர்தான், இருந்தாலும் நாடகம் அவரை ஈர்த்தது.
நாகேஷ் ரயில்வேயிலும் அப்பா ஏ.ஜி.எஸ். அலுவலகத்திலும் பணிபுரிந்த காலம் அது. உண்மையை சொல்வதென்றால் "நாங்கள் இருவருமே நாடகப் பைத்தியங்கள்' என்று அப்பா சொல்லுவார். நாடக மேடை என்பதும் அன்று ஒரு நடிப்புப் பள்ளியாக, கல்லூரியாகத் திகழ்ந்த மிகுந்த மதிப்புக்குரிய காலகட்டம் அது. அதுதான் இன்று காலத்தால் பதியம் போடப்பட்டு தொலைக்காட்சி நாடகம் என்று சினிமாவின் சிறப்பான அம்சங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டு சக்கை போடு போட்டுக்கொண்டி ருக்கிறது.
அப்படியொரு காலகட்டத்தில் அப்பாவுடன் அவர் இணைந்ததும் அப்பா அவரை இணைத்துக் கொண்டதும், காலம் ஒருவருக்கொருவர் வழங்கிக்கொண்ட பரிசு என்றுதான் கூறுவேன்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

