‘பணம் கொடு.... இல்லையென்றால் வழக்கு!’
வனத்துறையினர் எங்ககிட்ட பணம் வாங்கினது உண்மைதான். அந்தப் பணத்துல அவங்கவங்க பொண்டாட்டிகளுக்குத் தங்க நகைகூட வாங்கிக் குடுத்திருக்காங்க.
ஜவ்வாது மலையில் வெடித்து கிளம்பிய குற்றச்சாட்டு
ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களை மிரட்டிப் பணம் வசூலித்ததாக எழுந்த புகார், ரூ.1.2 கோடி லஞ்சக் குற்றச்சாட்டு எனப் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இதையடுத்து ஆறு வனத்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் பின்னணியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் சிறகடிக்கின்றன. `ஜவ்வாது மலையில் என்ன நடக்கிறது?’ விரிவாக விசாரித்தோம்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையின் ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் வனச்சரகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்துவரும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இவர்களின் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குப் பட்டா வாங்கித்தருவதாகக் கூறி, வனத்துறையினரே பணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வனச்சரகர்கள் பிரபு, சுரேஷ், செங்குட்டுவன், வனவர்கள் சுப்பிரமணி, அருணகிரி, வனக்காவலர் முத்து என ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.



