பாகுபாடான தண்டனையால் அரசு நிர்வாகத்துக்கு சிக்கல் வராதா?
தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கும் தொழில் நகரம் தூத்துக்குடி. அங்கு தாமிரம் உருவாக்கும் நிறுவனமாக அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தால், மக்கள் சுகாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்ற கொந்தளிப்போடு, அந்த நிறுவனத்தை மூடச் சொல்லி அங்கிருக்கும் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். ‘போராட்டத்தைக் கட்டுப்படுத்துகிறோம்’ என்ற பெயரில், அரசுத் தரப்பு போலீஸார் வாயிலாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், 13 பேர் துள்ளத் துடிக்க இறந்துபோயினர்.
இதற்கு நியாயம் கேட்டு சமூக ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும் பெரும் குரல் எழுப்பியதும், அப்போதைய அ.தி.மு.க அரசு, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. ஆணையம் பலகட்ட விசாரணை நடத்தி, அரசுக்குத் தன்னுடைய பரிந்துரைகளை அளித்தது. அதில் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.
ஆணையத்தின் பரிந்துரையை ஏற்ற அரசுத் தரப்பு, அதில் பாதியளவுக்கு நடவடிக்கை எடுத்தது. கீழ்நிலையிலுள்ள அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுத்த அரசு, உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது.




