``இளைஞர்கள் வழிதவறிடாம போட்டித் தேர்வுக்குத் திருப்புறாங்க!’’ - நெல்லை காவல்துறையின் நல்ல முயற்சி!
குரூப் 4 தேர்வு, காவலர் தேர்வு, எஸ்.ஐ தேர்வு ஆகியவற்றுக்குத் தயாராகும் இளம் தலைமுறையினருக்குத் தேவைப்படும் புத்தகங்கள் இங்கு வைக்கப் பட்டுள்ளன. இணைய வசதி மட்டுமல்லாமல் வைஃபை வசதியும் இலவசமாகச் செய்து கொடுத்திருக்கிறோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் சேருவதற்கு உதவும் வகையில், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ‘காவல் படிப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது,
`தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு’ என வர்ணிக்கப்படும் பாளையங்கோட்டையில் அமைந்திருக்கிறது, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். அந்த அலுவலகத்தைச் சுற்றிலும் கல்லூரிகள் இருப்பதால் எப்போதும் மாணவ, மாணவியரின் கூட்டம் நிறைந்திருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.


