சாலையோரம் ‘கண்டம்’; விபத்துக்கு வழி வகுப்பதால் கண்டனம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் -– சிறுமுகை சாலையோரம், ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய உடைந்த வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; பொதுமக்களுக்கான சிரமமும் அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம் -– சிறுமுகை சாலையில், சங்கர் நகர் பகுதியில், பழைய இரும்பு மற்றும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், அருகில் உள்ள சிராஜ் நகர், எல்.ஐ.சி., காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் உள்ளன. மார்க்கெட்டுக்கு வரும் பழைய மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்து உதிரி பாகங்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன. இதற்காக சிலர் வாகனங்களை சாலையோரம் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்குள்ள சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரட்டு மேடு வனப்பகுதியின் அடிவாரத்தில், பழைய, உடைந்த வாகனங்களின் கடைகள் செயல்படும் நிலையில், அங்கும் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

