இந்திய இளைஞர்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது அவசியம்; பிரதமர் மோடி
ஆமதாபாத்: இந்திய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது மிகவும் அவசியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.35,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2014க்குப் பிறகு இந்தியா 50,000 நவீன ரயில் பெட்டிகளை உருவாக்கியுள்ளது; ஆனால் முந்தைய ஆட்சியால் 10 ஆண்டுகளில் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை; 'சிப்' முதல் கப்பல்கள் வரை, இந்தியா இப்போது உற்பத்தித் துறையில் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கி வருகிறது.
எங்களது ஆட்சியில் ரயில்வே பணிகள் துரிதமாக நடந்து வருவதால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை காண முடிகிறது. காங்., கூட்டணி ஆட்சியில் சரக்கு ரயில்வே பாதைகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது சரக்கு ரயில்பாதை, சாலைகள், விரிவாக்கம் பணி செய்து வருவதால் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.




