Science and technology
AI முதல் சூரிய மின் திட்டங்கள் வரை.. இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி உறுதி!

உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவுகளில் இளைஞர்களுக்குப் பெருமளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்திய இளைஞர்களின் ஆற்றலும் லட்சியங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பலமாகத் திகழ்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தவறான பரப்புரைகளைக் காட்டிலும் இளைஞர்களின் உழைப்பும், உண்மையும், எதிர்கால நம்பிக்கையுமே இறுதியில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். குஜராத் மாநிலம் வடோதராவில் நடைபெற்ற ‘நமோ ஃபார் விக்சித் பாரத்’ (NAMO for Viksit Bharat) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம், செயற்கை நுண்ணறிவு (AI), வேலைவாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
இளைஞர்களை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்பத் தயார்படுத்துவதிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் கூறினார்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சுகாதாரம், விவசாயம், உற்பத்தி, கல்வி, போக்குவரத்து மற்றும் ரோபோடிக்ஸ் எனப் பல துறைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர உள்ளதால், இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் AI திறன் பயிற்சிகளை வழங்கப் பெரிய அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
மேலும், குஜராத் பயணத்தின் போது ரூ.35,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதில் வெஸ்டர்ன் டெடிகேட்டட் ஃபிரைட் காரிடாரின் (WDFC) 326 கி.மீ தொலைவிலான முக்கிய ரயில் சரக்கு போக்குவரத்துப் பாதைகளும் அடங்கும். இத்திட்டங்கள் நாட்டின் தொழில்துறை மற்றும் வர்த்தகப் போக்குவரத்து வேகத்தை கணிசமாக அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டது.
நாட்டின் உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் நோக்கில் ‘சிப்ஸ் முதல் ஷிப்ஸ் வரை’ (From Chips to Ships) உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, இறக்குமதியைக் குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 'பிரதமரின் சூரிய கர்: இலவச மின்சாரத் திட்டம்' மூலம் இதுவரை 55 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகவும், இதன் மூலம் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவுகளில் இளைஞர்களுக்குப் பெருமளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், AI தொழில்நுட்பம் மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவை உலகின் முன்னணி பொருளாதார சக்தியாக மாற்ற இளைஞர்களின் திறன் மிக அவசியம் என்று பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தினார்.

