புத்தகங்களின் வழியே ஒரு வைகறை!
தமிழ் இலக்கிய உலகில் சிலர் தாங்கள் எழுதிய நூல்களால் நினைவுகூரப்படுகிறார்கள். சிலர் பிறர் எழுதிய நூல்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதற்காக நினைவுகூரப்படுகிறார்கள். இந்த இரு பண்புகளையும் தன்னுள் கொண்டிருந்தவர் வைகறைவாணன். முன்னணி பதிப்பாளராக மட்டுமல்லாமல், எழுத்தாளர், சிந்தனையாளர், இதழியல் ஆர்வலர், சமூகச் செயல்பாட்டாளர் எனப் பல தளங்களில் இயங்கியவர். 2026, ஆகஸ்ட் 1 அன்று அவரது மறைவு தமிழ் அறிவுலகுக்கேயான இழப்பாகும்.
திருவையாறு அரசர் கல்லூரியில் கல்வி பயின்ற வைகறைவாணனின் அறிவுலகப் பயணத்துக்கு அவ ரது நட்பு வட்டம் முக்கியமான பின்னணியாக அமைந்தது. கைலாசம், மருது, பேராசிரியர் இளவரசு, பெரியாரியக்கத் தொண்டர் குருவிக்கரம்பை சு.வேலு உள்ளிட்டோருடனான தொடர்புகள் அவரது சிந்தனைப் பரப்பை விரிவுபடுத்தின. 1982-ல் "கார்க்கி நூலகம்' என்ற பதிப்பக முயற்சியைத் தொடங்கி, வி.பி. சிந்தனின் "இந்திய மண்ணில் பொருள் முதல்வாதக் கருத்துகள்' நூலை வெளியிட்டது அவரது பதிப்புலகப் பயணத்தின் முக்கியமான தொடக்கமாக அமை ந்தது.
பின்னர் "பொன்னி', "சாளரம்' ஆகிய பதிப்பகங்களின் வழியாக 70-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் வெளியிட்டார். ஏ.கே. செட்டியாரின் குடகு, கல்கியின் தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி போன்ற அரிய நூல்களை மறுபதிப்பாகக் கொண்டுவந்தார். வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள், ஏழாவது ஊழி, தோல்விகளின் ஒப்புதல், இன்குலாபின் ஒவ்வொரு புல்லையும், பூமணியின் முழுச் சிறுகதைகளைக் கொண்ட அம்பாரம் உள்ளிட்ட படைப்புகள் அவரது பதிப்புப் பார்வையின் பரப்பை உணர்த்துகின்றன.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
