ரூ.1,500 கோடி மோசடி... ஆவணங்கள் இல்லை... ஆப் முடக்கம்... 30% பணமாவது திரும்புமா?
எஃப்.க்யூ.எல் மோசடியில் ஈடுபட்ட ரிச்சர்ட் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைக் கண்டுபிடித்து, சொத்துகளைக் கையகப்படுத்தி ஏலம் விடலாம். | rs 1500 crore money fraud by fql company
‘45 நாள்களில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகும்’ என்ற ஆசைவார்த்தைகளை நம்பி, தங்களின் வாழ்நாள் சேமிப்பை ஒப்படைத்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கனவுகளைச் சிதைத்திருக்கிறது எஃப்.க்யூ.எல். மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்ட இந்தத் தனியார் நிதி நிறுவனம், ரூ.1,500 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்திருப்பது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.பணம் போனால் மீண்டும் சம்பாதித்துவிடலாம்... ஆனால், பணத்தை இழந்தவர்களின் மனநிலையும், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலமும் என்னவாகும் என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி. அந்தக் கேள்விக்கு விடை தேடும் முன்பே, திண்டுக்கல் காசம்பட்டியைச் சேர்ந்த ராசு என்பவர் எஃப்.க்யூ.எல் நிறுவனத்தில் முதலீடு செய்ததுடன், பலரையும் முதலீடு செய்ய வைத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 30 சதவிகிதத்தைக்கூட மீட்பது சவால்தான் என்று அதிரவைக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
இது குறித்துப் பேசிய வழக்கறிஞர் மனோஜ், “முதலீட்டாளர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் விசாரணை விரைவாக முடியும். ஆனால் ஆவணங்கள் இல்லாதது காவல்துறையின் விசாரணைக்குச் சவாலாக இருப்பதுடன், நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, நியோமேக்ஸ் வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துகள் தமிழ்நாட்டிலேயே உள்ளன. மேலும், முதலீட்டுக்கான ஆதாரமாக பாண்டுகள் இருப்பதால், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் கணக்கிட முடிகிறது. ஆனால் எஃப்.க்யூ.எல் விவகாரத்தில் பணம் கையில் கொடுக்கப்பட்டிருப்பதால், இது போன்ற ஆவண ஆதாரங்கள் இல்லாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.



