மேட்டூர் செல்ல 6 கோடி; காலை உணவுத் திட்டத்தை சீரமைக்க பணம் இல்லையா?-கேள்விகளால் விளாசும் இள.புகழேந்தி
தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. இவர்களின் பிறந்தநாள் விழாக்கள் தமிழகத்தின் அடையாளமாகக் கொண்டாடப்படும் வேளையில், அதற்குத் தடை விதிப்பதும், மாணவர்களுக்கான நலத்திட்டங்களில் குளறுபடிகள் ஏற்படுவதும் தற்போதைய ஆட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"தமிழக மக்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாக்களைத் தடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தத் தலைவர்களின் பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் கல்வி உதவிகள் வழங்குவது வழக்கம்.
அதனைத் தடுக்கும் இந்த விஜய் அரசு, உண்மையில் ஒரு ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி பின்னணி கொண்ட அரசு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. காவி மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளைத் தலைமறைவாக இருந்து கொண்டு விஜய் கட்சி செயல்படுத்துகிறது என்பதற்கான அப்பட்டமான அடையாளம் இது. அடுத்ததாக, மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கச் செலவுகளை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களே தங்களின் சொந்தச் செலவில் ஏற்க வேண்டும் என்று இந்த அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, உலக அளவிலும் கனடா நாட்டிலும் பாராட்டப்பட்ட இந்த உன்னதமான காலை உணவுத் திட்டத்தைச் சீர்குலைக்க விஜய் அரசு சதி செய்கிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


