மேயருக்கு ‘செக்’... டெண்டர்களுக்கு ‘பிரேக்’... களேபரமாகும் காரைக்குடி மாநகராட்சி!
2026-2027 நிதியாண்டுக்கு பேனா, பேப்பர், டோனர் உள்ளிட்ட எழுதுபொருள்கள் வாங்க ரூ.50 லட்சம் செலவழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
காரைக்குடி மாநகராட்சியின் முதல் மேயர் பதவி இழப்புத் தீர்மானம்; ரூ.4.19 கோடி மதிப்பிலான 3 ஆன்லைன் டெண்டர்களுக்கு தடை; ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு எழுதுபொருள் வாங்கும் தீர்மானத்துக்கு கடும் ஆட்சேபம் என ஆகஸ்ட் 31 அன்று மாமன்றமே மல்லுக்கட்டு அரங்கமாக மாறியது.
2024, மார்ச் 15-ல் காரைக்குடி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அது நகராட்சியாக இருந்தபோது 36 வார்டுகளில் நடந்த தேர்தலில், 22 இடங்களில் வென்று தி.மு.க மாமன்றத்தைக் கைப்பற்றியது. அப்போதே நகர்மன்றத் தலைவர் நாற்காலிக்குக் கடும் போட்டி நிலவியது. ‘குணசேகரன்தான் நகர்மன்றத் தலைவர்’ என இறுதி நிமிடம் வரை பேச்சுகள் பலமாக அடிபட்டன. ஆனால், க்ளைமாக்ஸில் அப்போதைய அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவோடு என்ட்ரி கொடுத்த எஸ்.முத்துத்துரை, காரைக்குடி நகராட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்; குணசேகரன் துணைத் தலைவரானார். அன்று தொடங்கியதுதான் இருவருக்குமான ஏழாம் பொருத்தம். காரைக்குடி மாநகராட்சியாகி இருவரும் மேயர், துணை மேயரான பின்பும் தொடர்கிறது.‘மேயர் எங்களை மதிப்பதில்லை; வளர்ச்சிப் பணிகள் இல்லை’ எனக் கூறி 2025, ஜூலை 10-ல் துணை மேயர் குணசேகரன் தலைமையில் 21 கவுன்சிலர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். தொடர்ந்து 24 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குக் கோரிக்கை விடுத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கெடுப்பு நடந்தபோது, தீர்மானம் கொண்டுவந்த துணை மேயர் கோஷ்டியே கூட்டத்துக்கு வரவில்லை. ‘அவர்களைக் கடத்திவிட்டார்கள்; துணை மேயர் உயிருடன் இருக்கிறாரா?’ என அ.தி.மு.க-வினர் `பகீர்’ கிளப்ப, போதிய உறுப்பினர்கள் இன்றி தீர்மானம் தோல்வியடைந்தது.



