தட்டுப்பாடு ராமநாதபுரத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு.. வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புகார்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவின் பாலகங்களில் பால் பாக்கெட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.2 ரூ.5 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். நாளுக்கு நாள் பால் பாக்கெட்டுகள் வருகை குறைந்து வருவதால் விற்பனை சரிவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்த பாலில் இருந்து நிலைப்படுத்திய பால், சமச்சீர் செய்யப்பட்ட நிலைப்படுத்திய பால், நிறை கொழுப்புப் பால் மற்றும் சமன்படுத்தப்பட்ட பால் என வெவ்வெறு தரத்தில் விற்கப்படுகின்றன. பால் பாக்கெட்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு மாதாந்திர பால் விற்பனை கமிஷன் வழங்குகிறது.
இவை அனைத்தும் பால் பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள விலைக்குள் அடங்கும். தனியார் பாக்கெட் பாலை விட குறைந்த விலையில் உள்ளதால் நுகர்வோர் அதிகம் பயனடைந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் கூடுதல் விலைக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


