இனியாவது மாறுமா: தரமற்ற தயாரிப்பால் விரைவில் மின்கம்பங்கள் சேதம்: விபத்து அபாயம், மின்சப்ளை சீர்குலைவால் தவிப்பு
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மின்கம்பங்கள் தரம் குறைவாக இருப்பதால் விரைவில் கான்கிரீட் சிதைந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இவற்றில் ஏறி பணி செய்ய ஊழியர்கள் தயங்குவதால் சப்ளை துண்டிப்பு பிரச்னை, தெருவிளக்கு பழுது போன்றவற்றை உடனடியாக சீரமைக்க முடியாத நிலை உள்ளது.
மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட ஏராளமான மின்கம்பங்கள் இன்றும் ஸ்திரமாக நிற்கின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில் நடப்பட்ட ஏராளமான மின்கம்பங்களின் தயாரிப்பு தரம் குறைவாக இருப்பதால் வெகு சில ஆண்டுகளிலே சிதைந்து பலவீனமாகி பரிதாபமாக உள்ளன.
மின்கம்பங்களை பொருத்தவரை கான்கிரீட்டும் அதனுள் இருக்கும் இரும்பு கம்பியும் சேர்ந்தே பலம் தருகிறது. ஒன்று பலமிழந்தாலும் மின்கம்பத்தின் ஆயுள் வெகுவாக குறைந்துவிடும். கான்கிரீட் சிதைந்த பகுதிக்குள் இருக்கும் இரும்பு கம்பியின் மீது படும் ஈரப்பதம் காரணமாக வெகு விரைவில் துருப்பிடித்து கம்பம் சிதைந்து பலமிழக்கிறது. கம்பியின் இழுதிறன், எடையால் கம்பம் உடைந்து விழும் ஆபத்தாக மாறுகிறது.

