தரமற்ற உதிரிப்பாகங்களால் தள்ளாடும் போக்குவரத்துக் கழகம்
மதுரை: தமிழக அரசு பஸ்களின் தரமற்ற உதிரிப்பாகங்களால், பஸ்களின் பராமரிப்பு பாதிக்கப்பட்டு பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்தாண்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற அரசு விரைவு பஸ் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளாகி, 7 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் அதன்பின் போக்குவரத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், 6 மாதங்களில் நுாற்றுக்கணக்கான அரசு பஸ்கள் டயர் வெடித்து விபத்தில் சிக்கியுள்ளன.
சில நாட்களுக்கு முன் குமுளி- நாகர்கோவில் அரசு பஸ் முன்பக்க டயர் வெடித்து, தனியாக ரோட்டில் ஓடியது; டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களில் தினமும் 2.03 கோடி பேர் பயணிக்கின்றனர். பஸ்களில் தொடரும் விபத்துக்களால் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.



